வாக்குச் சாவடிக்கு செல்லாமலேயே வாக்களிக்கும் ‘ரிமோட் வாக்களிப்பு’ (ரிமோட் வோட்டிங்) முறையை நடைமுறைப்படுத்துவது சாத்தியமா என்பது குறித்து தேர்தல் ஆணைய குழு ஆய்வு செய்து வருகிறது.
இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் மக்களின் பங்களிப்பை அதிகரிக்க, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், வாக்காளர்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட சதவீதத்துக்கு மேல் உயர்வதில்லை.
உதாரணமாக, கடந்த மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 67 சதவீதம் மக்களே வாக்களித்திருந்தனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் மேற்கொண்ட ஆய்வுகளில், வேலை நிமித்தமாக வெளிநாடு, வெளியூர், வெளிமாநிலங்களுக்கு சென்றிருக்கும் மக்கள் பெரும்பாலும் தேர்தல்களில் வாக்களிப்பதில்லை எனத் தெரிய வந்தது.
இதற்கு தீர்வு காணும் விதமாக, வாக்குச் சாவடிக்கு செல்லாமலேயே வாக்களிக்கும் ‘ரிமோட் வாக்களிப்பு’ முறையை அறிமுகம் செய்ய தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. இதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் ஐஐடி மெட்ராஸ், ஐஐடி பிலாய், ஐஐடி பாம்பே, தேசிய தகவல் மையம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ரிமோட் வாக்களிக்கும் முறையை கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகள், தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்தக் குழு ஆய்வு செய்து வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.