இணையத்தள சூதாட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். ஆரா டாமான்சாரா பகுதியில் இரு இடங்களில் அவர்கள் செயல்பட்டு வந்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் சூதாட்டம் மற்றும் குண்டர் கும்பல் தடுப்பு பிரிவினருடன் கிளானா ஜெயா போலீஸ் அதிகாரிகளும் இச்சோதனையில் ஈடுபட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நிக் எஸானி முகமட் ஃபைசால் தெரிவித்தார்.
முதல் அலுவலகத்தில் சோதனை செய்தபோது வேலை செய்து கொண்டிருந்த 5 பேரும் நிர்வாகி என நம்பப்படும் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் உள்நாட்டு பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கும்பல் மாதந்தோறும் 4 லட்சம் வெள்ளி வரை வருமானம் ஈட்டி வந்ததாகவும் வாடிக்கையாளர்களை கவர பணியாளர்களுக்கு மாதந்தோறும் 4 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட்டு வந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவர்கள் பயன்படுத்தி வந்த அலுவலகத்திற்கு மாதந்தோறும் 1,600 வெள்ளி வாடகை செலுத்தி வருகின்றனர். அவர்கள் பயன்படுத்திய பல்வேறு தொலைதொடர்பு சாதனங்கள் மற்றும் கணினிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் ஒரு அலுவலகத்தில் மேற்கொண்ட சோதனையின் போது நிர்வாகி என நம்பப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டார். சம்பந்தப்பட்ட இடத்தில் ஓராண்டிற்கு மேலாக இந்த இணையத் தள சூதாட்ட மையம் இயங்கி வருவதாக நம்பப்படுகிறது.








