கோலாலம்பூர், ஜூன் 14 :
இரத்த தானம் செய்ய முன்வருமாறு மலேசிய குடும்பங்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று அழைப்பு விடுத்துள்ளார். இதனால் இரத்த விநியோகம் தேவைப்படும் நோயாளிகள் காப்பாற்றப்பட்டு, முழுமையாகவும் விரைவாகவும் குணமடைய முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“இரத்த தானம் செய்வதன் மூலம் தேவைப்படுபவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியும்.
“மருத்துவமனைகளில், மருத்துவர்களும் செவிலியர்களும் இரத்தம் தேவைப்படும் ஒவ்வொரு நோயாளியையும் உயிருடன் வைத்திருக்க, போதுமான இரத்த விநியோகத்தைப் பெறுவதை உறுதிசெய்ய அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறார்கள்.
“இரத்த நன்கொடையாளர் தினமான இன்று அனைவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதாகவும், மலேசியக் குடும்ப உறுப்பினர்களைக் காப்பாற்ற இயலுமான அனைவரும் இரத்த தானம் செய்வோம், ”என்று அவர் இன்று அவரது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
உலக இரத்த தானம் செய்பவர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 அன்று கொண்டாடப்படுகிறது.