பாப்புலர் நிதிநிறுவன மோசடியில் தலைமறைவாக இருந்த இயக்குநர் டாக்டர் ரியா அன் தாமஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பாப்புலர் நிதிநிறுவனம் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் 238 கிளைகளுடன் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் அனைத்து கிளைகளும் சமீபத்தில் திடீரென மூடப்பட்டன. இதில், மக்கள் முதலீடு செய்த பல ஆயிரம் கோடி சுருட்டப்பட்டது.
இந்த நிலையில், வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்ற இதன் உரிமையாளர் டேனியலின் 2 மகள்களும் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். பின்னர், டேனியலும், அவரது மனைவியும் கேரளாவில் சிக்கினர். இதன் இயக்குநர்களில் ஒருவரும், பெண் டாக்டருமான ரியா அன் தாமஸ் தலைமறைவாக இருந்தார். அவர் 3 வாரத்துக்கு முன்ஜாமீன் பெற்றிருந்தார். ஆனால், கோன்னி காவல் நிலையத்தில் ரியா அன் தாமஸ் மீது வேறொரு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் விசாரணை நடத்திய போலீசார், நிலம்பூரில் பதுங்கி இருந்த ரியாவை நேற்று கைது செய்தனர். இவர் காசர்கோடு மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.