உலகிலேயே மிக உயரமாக கட்டடம் என்ற பெருமையைப் பெற்ற துபையில் உள்ள புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் இன்று மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது புகைப்படம் ஒளிரவிடப்பட உள்ளது.
இது குறித்து துபைக்கான இந்திய தூதரகம், தனது அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில், 21-ஆம் நூற்றாண்டுக்கு பொருந்தும் மகாத்மா காந்தியின் பொன்மொழிகள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு நேரப்படி இரவு 7 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெறும் என்றும், அதனைத் தொடர்ந்து இரவு 8.15 மணியளவில் புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் மகாத்மா காந்தியின் புகைப்படம் ஒளிரவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுபோன்று கடந்த இரண்டு ஆண்டுகளாக மகாத்மா காந்தியின் பிறந்தநாளன்று மகாத்மா காந்தி மற்றும் இந்திய தேசியக்கொடி ஒளிரவிடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வு, இந்திய தூதரகத்தின் சமூக வலைப்பக்கத்தில் நேரலையாகவும் ஒளிபரப்பப்பட உள்ளது.