அமெரிக்க தாக்குதலில் காமேனி உயிரிழப்பு.. ஈரானில் அடுத்து என்ன நடக்கும்?

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நேற்று திடீரென தாக்குதலை தொடங்கியுள்ளன. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் தீவிர போர் நிலவி வருகிறது. அந்த பிராந்தியம் முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதை அந்நாட்டின் அரசு ஊடக நிறுவனமான ஐஆர்என்ஏ உறுதி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

காமேனி மறைவையடுத்து 7 நாட்கள் பொது விடுமுறையும், 40 நாட்கள் துக்கமும் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள ஈரான் தூதரகங்களில் அந்நாட்டு கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.காமேனி கொல்லப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவை கண்டித்து ஈரான் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காமேனியின் ஆதரவாளர்கள் கதறி அழும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.உச்ச தலைவர் கொல்லப்பட்ட நிலையில், ஈரானை அடுத்து வழிநடத்தப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதாவது, காமேனியின் மகன் மொஜ்தபா புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நாட்டை தற்காலிகமாக வழிநடத்த அதிபர் மசூத் பெஷ்கியான் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், 88 பேர் கொண்ட வல்லுநர் குழு விரைவில் கூடவுள்ளதாகவும், அந்தக் குழுவே புதிய உச்ச தலைவரை தேர்வு செய்யும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, இதுவரை இல்லாத அளவுக்கு பதிலடி கொடுப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இதனால் ஈரான் -அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மோதல் மேலும் தீவிரமடையும் என அச்சம் நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here