நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக உழைத்தாலும், எதிர்க்கட்சிகளின் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறார். ‘இந்திய பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி போவதற்கு நிதி அமைச்சர் தான் காரணம்’ என, காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
பா.ஜ.,வுக்குள்ளும், அவருக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. இதனால், பியுஷ் கோயலுக்கு நிதி அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்றும், அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், ‘நிர்மலா சீதாராமனை, பிரதமர் மாற்ற மாட்டார்; அவர் நிதி அமைச்சராகவே தொடர்வார். பிரதமர் மோடியின் ஆலோசனையின் படியே, நிர்மலா சீதாராமன் செயல்படுகிறார். எனவே, இதெல்லாம் வெறும் வதந்தி தான்’ என்கின்றனர், கட்சியின் மூத்த தலைவர்கள்.
ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஓரங்கட்டப்பட்டு விட்டதாக ஏற்கனவே கூறப்பட்டது. ஆனால் இப்போது அவர் மீது, பிரதமர் மோடிக்கு மதிப்பும் மரியாதையும் பெருமளவு உயர்ந்துள்ளது என சொல்லப்படுகிறது. விவசாயிகள் மசோதா மற்றும் சீன பிரச்னையை, ராஜ்நாத் சிங் பார்லிமெண்டில் கையாண்ட விதம் ஆகியவற்றை, பிரதமர் பாராட்டியுள்ளார்.’எப்போது மத்திய அமைச்சரவை மாற்றம் நடந்தாலும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. இந்த மூவரும், பிரதமருக்கு நெருக்கமானவர்கள்’ என்கின்றனர், கட்சியின் முக்கிய பிரமுகர்கள்.