மழைக்காலங்களில் மின்விபத்தை தவிர்ப்பது குறித்து பொதுமக்களுக்கு திருச்சி மின் ஆய்வுத் துறையின் மின் ஆய்வாளர் அலுவலகம் ஆலோசனை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பொதுமக்கள் ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற தரமான மின் சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வீடுகளில் மின்கசிவு தடுப்பான் பொருத்தி மின் விபத்தை தவிர்க்கலாம். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வீடுகளில் உள்ள மின் இணைப்புகளை சோதனை செய்து, தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே வயர்கள் மற்றும் அறுந்து விழுந்த மின்கம்பி அருகே செல்லக் கூடாது. மேல்நிலை மின்சாரக் கம்பிகளுக்கு அருகில் போதுமான இடைவெளி விட்டு கட்டிடங்களை கட்ட வேண்டும். மேலும் விவரங்களுக்கு மின்வாரிய மற்றும் மின் ஆய்வுத் துறையை அணுகலாம்.
இடி, மின்னல் ஏற்படும்போது வெட்டவெளியிலோ, குடிசை வீடு, மரம், பேருந்து நிழற்குடை ஆகியவற்றின் கீழோ நிற்கக் கூடாது. கான்கிரீட் கட்டிடங்கள், பேருந்து, கார், வேன் போன்றவற்றில் தஞ்சமடையலாம். திறந்த நிலையில் உள்ள கதவு, ஜன்னல் ஆகியவற்றின் அருகே இருக்கக் கூடாது. இந்த சமயத்தில், வீடுகளில் கிரைண்டர், மிக்சி, கணினி, தொலைக்காட்சி பெட்டி மற்றும் தொலைபேசி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.