அந்த வகையில் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் ஒன்றான பென்சில்வேனியாவில் பதிவான பல லட்சம் அஞ்சல் ஓட்டுக்கள் செல்லாதவை என அறிவிக்கக்கோரி டிரம்ப் பிரசாரக் குழு சார்பில், அந்த மாகாண கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி மேத்யூ பிரான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது டிரம்ப் பிரசாரக்க் குழு தரப்பில் ஆஜரான வக்கீல்கள் பென்சில்வேனியாவில் ஜனநாயக கட்சியால் நடத்தப்படும் மாவட்டங்கள் வாக்காளர்களை தங்கள் வாக்குச்சீட்டில் பிழைகக்ச் சரி செய்ய அனுமதித்தன என்றும், அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சமமான பாதுகாப்புக்கான உத்தரவாதம் மீறப்பட்டுள்ளதாகவும் வாதிட்டனர்.
அதேசமயம் இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க டிரம்ப் பிரசாரக் குழு எந்தவித ஆதாரங்களையும் கோர்ட்டில் சமர்ப்பிக்கவில்லை. இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி முறைகேடு நடந்துள்ளதாக டிரம்ப் பிரசாரக் குழு முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என கூறி, அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதன் மூலம் அடுத்த வாரம் பென்சில்வேனியா மாகாணம் ஜோ பிடனுக்கு வெற்றிச் சான்றிதழ் அளிப்பதற்கு வழி உண்டாகியுள்ளது.
அதேசமயம் இது தேர்தல் முடிவுகளுக்கு எதிராக சட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டிரம்ப் தரப்பினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் ஜார்ஜியா மாகாண மறு வாக்கு எண்ணிக்கையிலும் குளறுபடி நடந்துள்ளதாகக் கூறி மீண்டும் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என்று டிரம்ப் பிரசாரக்குழு நீதி மன்றத்தை நாடியுள்ளது.
அதேபோல் மிச்சிகன் மாகாணத்தில் அதிபர் தேர்தல் முடிவை அறிவிப்பதை 2 வார காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று குடியரசு கட்சி நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.