புகுந்த வீட்டிலிருந்து பெண்ணை வெளியேற்ற முடியாது- உச்சநீதிமன்றம் தீர்ப்பு

திருமணமான பெண்களுக்குப் புகுந்த வீடும் சொந்தமானது தான். திருமணமாகி, மணமகனின் வீட்டிற்குள் செல்லும் பெண்ணை, எந்த காரணமும் இன்றி, அந்த வீட்டிற்கு அப்பெண் உரிமையுடையவராக இல்லாதிருந்த போதும், அங்கிருந்து வெளியேற்ற முடியாது என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், திருமணமான பெண்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.

கர்நாடகா மாநிலம், வடக்கு பெங்களூரில் வசிக்கும் ஒரு  குடும்பம் தனது மகனின் மனைவி, தங்களுக்குச் சொந்தமான வீட்டில் குடியிருந்து வருவதாகவும், அவரை அந்த வீட்டை விட்டு காலி செய்யச் சொல்லி வற்புறுத்தியும், அவர் அதற்கு சம்மதிக்காமல் தொடர்ந்து அந்த வீட்டில் வசித்து வருவதாகவும், எனவே, அந்த வீட்டை தங்களது மருமகள் காலி செய்து தங்களிடம் ஒப்படைக்க உத்தரவிடவேண்டும் என கோரியிருந்தனர்.

இந்த வழக்கை மூத்த குடிமக்களின் உரிமை கோரலின் கீழ் அந்த வயதான தம்பதியினர் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பெண்களுக்கு சட்டரீதியிலான சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஒரு பெண் திருமணம் செய்த பின்னர், அவருக்குச் சொந்த வீட்டிலும் உரிமை உள்ளது போல், புகுந்த வீட்டிலும் உரிமை உள்ளது. அந்த வீட்டிற்கு அவர் உரிமை கோர முடியாவிட்டாலும், அந்த வீட்டிலிருந்து அவரை சட்ட ரீதியாக வெளியேற்ற முடியாது.

இது இந்திய சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. எனவே, அவரை அந்த வீட்டை விட்டு காலி செய்யச் சொல்ல சட்டரீதியில் யாருக்கும் அதிகாரம் கிடையாது என உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு மூலம் பெண்களுக்கு உரிய சட்ட பாதுகாப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இதனால், திருமணமான பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பை பெண்கள் அமைப்பைச் சேர்ந்த பலரும் வரவேற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here