இஸ்லாமாபாத்-
பாக்கிஸ்தான் அரசு அந்நாட்டு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. குறிப்பாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் பாக்கிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளார் எனவும் அரசியல் ரீதியில் என்ற எந்த முடிவுகளை எடுக்க வேண்டுமானாலும் ராணுவத்திடம் கேட்டபின்னரே முடிவு எடுக்கிறார் எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதற்கிடையில், 2018- ஆம் ஆண்டு தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளது என குற்றம் சுமத்திவரும் எதிர்க்கட்சிகள் சி மாதங்களாக பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராககப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இம்ரான்கான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் 11 எதிர்க்கட்சிகள் பாக்கிஸ்தான் ஜனநாயக இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தின்போது இம்ரான்கான் பாக்கிஸ்தான் ராணுவத்தின் கைப்பாவையாக இருப்பதாக கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டங்களால் பாக்கிஸ்தான் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தன்மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பிரதமர் இம்ரான்கான் அளித்த பேட்டியில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றது என்றார்.
பாக்கிஸ்தான் ராணுவம் அரசு அமைப்பு. அது எனது கட்டுப்பாட்டின் கீழ் தான் வேலை செய்கிறது என தெரிவித்துள்ளார்.