தாளவாடி-
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் ஏராளமான மான், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தலமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதி வழியாக தலமலையில் இருந்து திம்பம் செல்லும் சாலை அமைந்துள்ளது.
உணவு, தண்ணீர் தேடி யானை, சிறுத்தை, மான் போன்ற வனவிலங்குகள் இந்தச் சாலையை அடிக்கடி கடந்து செல்வது வழக்கம்.
அதன்படி நேற்று பகல் 11.30 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டமாக வெளியேறின. பின்னர் இந்த யானைகள் ராமர் அணை அருகே செல்லும் ரோட்டுக்கு வந்து நின்றன. அப்போது அந்த வழியாக தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு அரசு பஸ் சில பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. யானைகளை பார்த்ததும் டிரைவர் பயந்து, பஸ்சை சற்று தூரத்திலேயே நிறுத்திக்கொண்டார்.
அதேபோல் அந்த வழியாக இருசக்கர வாகனம், கார், சரக்கு வாகனங்களில் வந்தவர்களும் யானைகளை பார்த்ததும் ரோட்டில் ஆங்காங்கே தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொண்டனர்.
யாரும் வாகனங்களை விட்டு கீழே இறங்காமல் உள்ளேயே இருந்தனர். ஒரு சிலர் யானைகளை தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
யானைகள் ரோட்டில் அங்கேயும், இங்கேயும் ராஜ நடைபோட்டன. பின்னர் தானாகவே அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. அதன்பின்னரே போக்குவரத்து நிலைமை சீராகியது. இதையடுத்து வாகனங்கள் அங்கிருந்து சென்றன. யானைகளால் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பஸ்சில் வந்த பயணிகள் அவதியடைந்தனர்.
இதுபற்றி அறிந்த வனத்துறையினர் கூறும்போது, ‘தலமலை வனப்பகுதி சாலையில் யானை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம்’ என்றனர்.