ராஜமுந்திரி:
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் பிரிட்டனில் உள்ள தனது கணவரை சந்தித்துவிட்டு விமானம் மூலம் டெல்லி வந்து சேர்ந்தார். அவர் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
ஆனால், பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே, அவர் தனிமை முகாமில் இருந்து தப்பி, சிறப்பு ரெயில் மூலம் ஆந்திரா வந்து சேர்ந்தார்.
அதேசமயம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. உடனடியாக இதுபற்றி ஆந்திர மாநில சுகாதாரத்துறை, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அந்தப் பெண்ணைத் தேடிப்பிடித்து விசாரணை செய்து, ராஜமுந்திரியில் உள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தினர். அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அந்தப் பெண்ணுக்கு புதிய வகை உருமாறிய கொரோனா தொற்று உள்ளதா? என்பதை உறுதிப்படுத்துவதற்காக, அவரது மாதிரிகள் புனேயில் உள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஆந்திரப் பெண்ணுக்கு புதிய வகை உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை மாநில சுகாதாரத்துறை ஆணையர் காதம்னேனி பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் இருந்து சமீபத்தில் ஆந்திராவுக்கு வந்த 1,423 நபர்களில் இதுவரை 1,406 நபர்கள் அடையாளம் காணப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்புடைய 6364 நபர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில், 12 பேருக்குத் தொற்று உறுதியானது.
இந்த 24 நபர்களுக்கும் உருமாறிய கொரோனா தொற்று உள்ளதா? என்பதைக் கண்டறிய அவர்களின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.