தஞ்சாவூர்-
தஞ்சை அருளானந்த நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி நதியா. இவர்களது மகள் தயாநிதிதா (வயது 10). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4- ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் ஒரு நிமிடத்தில் வரலாற்று நினைவுச்சின்னங்கள், அதனைக் கட்டியவர்களின் பெயர்களைக் கூறி இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
இதற்கான நிகழ்ச்சி தஞ்சையில் நேற்று நடந்தது. இந்தியன் ரெக்கார்டு புக் நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், மாணவி கலந்து கொண்டு இந்த சாதனையை நிகழ்த்தினார். 1 நிமிடத்திற்குள் 30 வரலாற்று நினைவுச்சின்னங்களின் பெயர் அவற்றை கட்டியவர்களின் பெயர்களைக் கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மாணவி தயாநிதிதா ஒரு நிமிடத்தில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 48 வரலாற்று நினைவுச் சின்னங்களின் பெயர்கள், அதனைக் கட்டியவர்கள் பெயர்களைச் சொல்லி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
இதுவரை யாரும் இந்த சாதனையை நிகழ்த்தியது இல்லை. இதையடுத்து சாதனை படைத்த மாணவிக்கு இந்திய சாதனை புத்தகத்தின் தீர்ப்பாளர் விவேக் அதற்கான பதக்கம் சான்றிதழை வழங்கினார்.