சென்னை-
2016- ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து டிசம்பர் வரையில் மட்டும் 30 ஆயிரம் கேமராக்கள் சென்னை மாநகரில் அமைக்கப்பட்டன. இதனால் கேமராக்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது. 2017- ஆம் ஆண்டு சென்னையில் உள்ள கேமராக்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரமானது. 2018- ஆம் ஆண்டு 2 லட்சத்து 30 ஆயிரமாகவும், 2019- ஆம் ஆண்டு 2 லட்சத்து 80 ஆயிரமாக அது அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சென்னையில் கேமராக்களின் எண்ணிக்கை 3 லட்சமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த கேமராக்கள் மூலமாக சென்னை மாநகரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றவாளிகளைப் பிடிக்க கேமராக்கள் பெரிதும் உதவியாக உள்ளன.
தடயங்கள் இல்லாத வழக்குகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளனர். கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்ற வழக்குகளிலும், அடிதடி மோதல் சம்பவங்களின் போதும் சம்பவ இடங்களுக்கு செல்லும் போலீசார் முதலில் அப்பகுதியில் கேமரா இருக்கிறதா? என்றுதான் பார்ப்பார்கள்.
சென்னை மாநகரில் கேமரா பொருத்தும் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தபோது, போலீசார் அதற்கு ‘‘3- ஆவது கண்’’ என்றே பெயர் வைத்திருந்தனர்.
அதற்கேற்ப சென்னை மாநகரின் பாதுகாப்புக்கு கேமராக்கள் 3- ஆவது கண் போல எப்போதும் விழித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னைக்கு அடுத்தபடியாக ஐதராபாத்தில் 3 லட்சம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சென்னையில் 2 லட்சத்து 80 ஆயிரம் கேமராக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக லண்டனில் 6.6 லட்சம் கேமராக்களும், பெய்ஜிங்கில் 10 லட்சம் கேமராக்களும் நிறுவப்பட்டுள்ளன.