சிறுவயதிலேயே தனது தந்தையை இழந்த இவர் , தனது தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தில் கஷ்டத்தோடு பியானோ, ஹார்மோனியம் , கிதார் ஆகிய கருவிகளை வாசிக்கக் கற்றுக் கொண்டார்.
தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக்கொண்டார். தனது 11- ஆவது வயதில் இசைஞானி இளையராஜாவின் இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன், குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடமும் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாச்சிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.
மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானார் இவர்.
அதைத்தொடர்ந்து இந்தி, ஆங்கிலம் என பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் ‘இசைப்புயல்’ என அனைவராலும் அழைக்கப்படும் ரகுமான்.
இவர் கோல்டன் குளோப் விருது, பாப்டா விருது, தேசிய திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றுள்ளார். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம்டாக் மில்லினியர் என்ற ஆங்கில படத்தில் இசையமைத்ததற்காக 2 ஆஸ்கார் விருதுகளையும் இவர் வென்றிருக்கிறார். ஆஸ்கார் விருது மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று இவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திர வார்த்தையை அங்கே உச்சரித்து தமிழனின் பெருமையை உலகெங்கும் புகழச் செய்தவர்.