செங்கடலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள எகிப்தின் ஹூர்கடா கடற்கரை நகரம் சுற்றுலாவுக்கு பெயர் பெற்றது. இப்பகுதி கடலில் அதிகளவில் சுறா மீன் தென்பட்டாலும், கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் த்ரில்லாக குளிப்பது வழக்கம்.
இந்நிலையில், சுறா மீன் தாக்கியதில் விளாடிமிர் போபோவ் என்னும் 23 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். பூர்வீக ரஷ்யரான விளாடிமிர் போபோவ் தந்தையுடன் எகிப்தில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், தந்தையின் கண் முன்னே விளாடிமிர் சுறா மீன் தாக்கி உயிரிழந்துள்ளார். மேலும், அப்போது, விளாடிமிர் போபோவின் தோழி கடலில் குளித்துக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
சுறா மீன் தாக்குதலில் சிக்கிய விளாடிமிர், ‘அப்பா காப்பாற்றுங்கள்’ என கத்தியதை கண்டு அதிர்ச்சியில் உறைந்ததாக அவரது தந்தை போபோவ் தெரிவித்துள்ளார்.
சுறா மீன் தாக்கி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அப்பகுதியில் குளிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த சுறா பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது.





















