சிப்பாங் –
சிப்பாங் தமிழ்ப்பள்ளியில் பாலர் பள்ளி மாணவர்களின் எண்ணிகை அதிகரித்து வருவதால இப்பள்ளியில் கூடுதலாக ஒரு பள்ளி கட்டப்பட வேண்டும் என்று பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பெ.சிவகுமார் தெரிவித்தார்.
தற்போது இப்பள்ளியில் ஒரு பாலர் வகுப்பு செயல்பட்டு வருவதாகவும் அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி ஒரு பாலர் வகுப்பில் 25 மாணவர்கள் மட்டுமே பயில முடியும் என்பதால் பாலர் வகுப்பிற்கு பதியும் மாணவர்களின் எண்ணிக்கை 25 எண்ணிக்கையைத் தாண்டும்போது கூடுதல் மாணவர்களை வகுப்பில் சேர்க்க முடிவதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழ்ப்பள்ளிகளில் இயங்கும் பாலர் பள்ளிகளில் ஒரு வகுப்பில் பயிலும் 25 மாணவர்கள் தங்களுடைய முதலாம் ஆண்டை பெரும்பாலும் அதே பள்ளியில் தொடர முடியும் என்பதால் தமிழ்ப்பள்ளிகளில் கூடுதல் பாலர் வகுப்புகள் இருந்தால் தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.
புதிய கல்வித் தவணைக்கு சிப்பாங் தமிழ்ப்பள்ளியின் பாலர் வகுப்பிற்கு 25 மாணவர்கள் பதிந்து கொண்டு விட்டதால் தொடர்ந்து பாலர் வகுப்பிற்கு பதிய வரும் மாணவர்களை சேர்க்க முடியவில்லை.
பாலர் வகுப்பிற்கு இடம் கிடைக்காத மாணவர்கள் மற்ற மொழி
பாலர் பள்ளிகளுக்குச் சென்று விடுவதால் அடுத்து இம்மாணவர்கள் தங்களின் முதலாம் ஆண்டை மற்ற மொழிப் பள்ளிகளிலே தொடரக் கூடிய வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு தமிழ்ப்பள்ளிகளில் இயங்கும் பாலர் வகுப்புகளும் ஒரு காரணம் என்றும் எனவே பாலர் பள்ளி பற்றாக் குறையை எதிர்நோக்கும்
தமிழ்ப்பள்ளிகளுக்கு அனைத்து வசதிகளையும் கொண்ட கூடுதல் பாலர் பள்ளிகளை கட்டித் தருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவகுமார் தெரிவித்தார்.
எம்.எஸ்.மணியம்