ராமேசுவரம்
இயற்கை எழில் கொஞ்சும் கச்சத்தீவு 287 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. இலங்கைக்கு கச்சத்தீவு கொடுக்கப்பட்டாலும் நம் நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பின்போது ஓய்வெடுக்கவும், வலைகளை உலர்த்தவும் பயன்படுத்தவும் உரிமை உண்டு. கச்சத்தீவில் அமைந்துள்ள அந்தோணியார் ஆலயம், இருநாட்டு மீனவர்களுக்கும் முக்கிய வழிபாட்டு தலமாக விளங்குகிறது.
ஆண்டுதோறும் இந்த ஆலயத்தில் பிப்ரவரி மாதத்தின் இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலோ 2 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் இந்திய-இலங்கையை சேர்ந்த இருநாட்டு மக்களும் திரளாக கலந்துகொள்வார்கள்.
இந்த ஆண்டு கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற பிப்ரவரி மாதம் 26, 27 ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு நடைபெறும் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் இரு நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் மற்றும் நெடுந்தீவு பங்குத்தந்தை, கடற்படை அதிகாரிகள், இந்திய துணை தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நெடுந்தீவு பங்குக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 150 பேர் மட்டுமே இந்த ஆண்டு நடைபெறும் அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொள்வார்கள் என்றும், இரு நாடுகளை சேர்ந்த பக்தர்கள் யாரும் இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்கு அனுமதி கிடையாது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.