வேளாண் மசோதாக்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், குடியரசு தினமான இன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர். டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் டிராக்டர் பேரணி நடத்த சிலர் திட்டமிட்டுள்ளனர். சில விவசாயச் சங்கங்களும் டிராக்டர் பேரணி நடத்த வெளிப்படையாக அறிவித்துள்ளன.
இந்நிலையில், குடியரசு தினமான இன்று டிராக்டர் பேரணி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சட்ட விதிமுறை களை மீறி டிராக்டர், இரு சக்கர வாகன பேரணி நடத்தினால் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
எவ்வித பேரணிகளையும் நடத்த அனுமதி கிடையாது. தடையை மீறி பேரணி நடத்தினால் மோட்டார் வாகனச் சட்டப்படியும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்’ என காவல் துறை எச்சரித்துள்ளது. இதேபோல், அனைத்து மாவட்ட எஸ்பி.க்களும் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்