வடசென்னை கடலோர பகுதிகளில் நிலத்தடி நீரின் உப்புத்தன்மை அதிகரித்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வடசென்னை கடலோர பகுதிகளில் நிலத்தடி நீரின் உப்புத்தன்மை அதிகரித்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வடசென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் அருகிலுள்ள கடலோரப் பகுதியில் நிலத்தடி நீர் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் இந்த பகுதியில் நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரித்து இருப்பது தெரிய வந்தது.
ஆரணியாறு- கொசஸ்தலையாறு ஓரத்தில் அமைந்துள்ள பொன்னேரி, பஞ்செட்டி, மீஞ்சூர் கடலோர பகுதியில் நிலத்தடி நீரில் கடல் நீர் பாதிப்பு மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடல் நீர் பரவல் காரணமாக இங்கு நிலத்தடி நீரில் உப்புதன்மை அதிகமாகி உள்ளது.
1969ஆம் ஆண்டு அத்திப்பட்டு அருகே கடற்கரையில் இருந்து 4 கி.மீட்டர் தூரத்துக்கு உள் நிலத்தில் கடல்நீரின் பரவல் இருந்தது. இதனால் அங்கு நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரித்தது.
2019-ஆம் ஆண்டு சுமார் 18 கி.மீ. தூரம் உள் நிலத்தில் கடல்நீரின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. இதனால் வடசென்னை கடலோர பகுதியில் நீண்ட தூரம் நிலத்தடி நீரில் உப்பு தன்மை அதிகமாகி இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகமும், ஜெர்மன் ஆய்வு நிறுவனமும் சேர்ந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வடசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதியில் நிலத்தடி நீரில் உப்புத்தன்மை 10 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரித்துள்ளது. முன்பு ஒரு லிட்டர் தண்ணீரில் 2 ஆயிரம் மில்லிகிராம் உப்புத்தன்மை இருந்தது.
தற்போது இது 8 ஆயிரம் மில்லிகிராமாக அதிகரித்துள்ளது. காட்டூர், மவுத்தான்பேடு, செங்கனிமேடு பகுதியில் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
1988-ல் நடந்த ஆய்வுடன் ஒப்பிடும்போது கடல் அருகில் உள்ள சில பகுதிகளில் குளோரைடு அளவு 200 மில்லிகிராமில் இருந்து 7 ஆயிரம் மில்லி கிராமாக அதிகரித்துள்ளது. அருகிலுள்ள ஏரிகளில் மழைநீர் சேமிக்கப்பட்டதால் 2015-க்கு பிறகு பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் நிலத்தடி நீர் மேம்பட்டது.
எனனே உப்புத்தன்மையை குறைக்க பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீர் சேமிப்பு நீர்நிலைகளை அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.