நிலநடுக்கத்தின் போது என்ன செய்யக்கூடாது

தெரிந்துகொள்ள சில நிமிடங்கள் 
புதுடெல்லி:
இந்தியாவில் நில அதிர்வுகள் (Earthquake) ஏற்படுவது மிகவும் பொதுவானது தான். ஆனால் இயற்கை பேரழிவு எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது.
அதேபோல் பூகம்பங்கள் எங்கு, எப்போது, எந்த நேரத்தில் தாக்கும் என்பது யாருக்கும் தெரியாது. பூமியின் மேற்பரப்பிற்கு கீழே உள்ள டெக்டோனிக் தட்டுகள் நகர்வதால் நிலநடுக்கம் ஏற்படுகிறது.

இந்திய தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards) இந்தியாவில் உள்ள பிராந்தியங்களை 4 நில அதிர்வு (Earthquake) மண்டலங்களாக வகைப்படுத்தியுள்ளது, அவை, மண்டலம் II, III, IV , V.  

மிகவும் தீவிரமான நில அதிர்வு மண்டலம் V (very sever intensity zone), கடுமையான நில அதிர்வு மண்டலம் IV, நடுத்தர தீவிர நில அதிர்வு மண்டலம் III, மிதமான நில அதிர்வு மண்டலம் II என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நேஷனல் ஜியோகிராஃபிக் படி (National Geographic), பூகம்பத்தின் போது என்ன செய்ய வேண்டும், எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்கான உதவிக்குறிப்புகள் இங்கே.

நில அதிர்வை உணர்ந்தவுடனே முதலில் செய்யவேண்டிய விஷயம் கீழே படுத்துவிட வேண்டும். இது மிகவும் முக்கியமானது.

பூகம்பத்தின் போது, தரையில், ஒரு மேஜை அல்லது மேசையின் கீழ் படுத்துக் கொண்டு, நில அதிர்வு நிற்கும் வரை இருக்கும் இடத்திலேயே இருக்கவும்.

நீங்கள் வீட்டினுள்ளே இருந்தால், உள்ளேயே இருங்கள். நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருந்துவிட்டால், காயமடைவதற்கான வாய்ப்புகள் குறைவு.

உங்கள் மீது விழக்கூடிய பொருட்கள், புத்தக அலமாரிகள் அல்லது தொங்கும் பொருள்கள் இருந்தால், அவற்றில் இருந்து விலகி இருங்கள்.

சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தால், உடனடியாக அடுப்பை அணைக்கவும்.

நீங்கள் படுக்கையில் இருந்தால், தலையணையால் உங்கள் தலையைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அங்கேயே இருங்கள்.

ஜன்னல்கள் , சுவர்களுக்கு அருகில் இருந்தால் அங்கிருந்து விலகிச் செல்லவும்.

மின்சாரம் துண்டிக்கப்படக்கூடும் என்பதால் லிஃப்ட் அல்லது எலிவேட்டரை பயன்படுத்த வேண்டாம்.

நீங்கள் வெளியே இருந்தால், கட்டடங்கள், மின்சார கம்பிகள், மரங்கள், எரிவாயு இணைப்புகள், சுரங்கப்பாதைகள், ஃப்ளைஓவர்கள் போன்ற இடங்களில் இருந்து விலகிச் செல்லுங்கள்.

காரில் சென்றுக் கொண்டிருந்தால், அதை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி, நில நடுக்கம் நிற்கும்வரை காரிலேயே இருங்கள்.

பூகம்பத்திற்குப் பிறகு என்ன செய்ய வேண்டும்?

பின்விளைவுகளுக்கு தயாராக இருங்கள். பூகம்பத்திற்குப் பிறகு அதன் தாக்கம், சில மணிநேரம், நாட்கள் அல்லது சில நேரங்களில் பல வாரங்கள் கூட நீடிக்கக்கூடும்.

கட்டடம் , கான்கிரீட் கட்டமைப்புகளிலிருந்து விலகி இருங்கள், ஏனெனில் நிலநடுக்கத்தின் தாக்கத்தினால், கட்டடங்கள் சேதமடையலாம். அவை இடிந்து விழுந்து உங்களுக்கு காயத்தை ஏற்படுத்தக்கூடும்.

பூகம்பங்கள் வந்தால், அதன் கூடுதல் இணைப்பாக ஆபத்தான சுனாமி , வெள்ளம் ஏற்படலாம் என்பதால் கடற்கரையிலிருந்து விலகி இருங்கள்.

பூகம்பங்கள் வாயு இணைப்புகளை சேதப்படுத்தும் என்பதால் தீப்பிழம்புகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்கவும். சேதமடைந்த கட்டடங்களில் லைட்டர்கள் அல்லது தீப்பெட்டியை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

நிலநடுக்கம் காரணமாக சாலைகள் , வழிகள் சேதமடையக்கூடும் என்பதால், வாகனத்தில் பயணம் செய்வதானால், தகவல்களைத் தெரிந்துக் கொண்டு அதற்கேற்றாற் போல பயணத்தைத் திட்டமிடவும்.

பூகம்பத்தின் தீவிரத்திற்கு ஏற்ப அதன் தன்மையும், சேத அளவும் மாறுபடும் என்றாலும், நீங்கள் இந்த உதவிக்குறிப்புகளை விடாமுயற்சியுடன் பின்பற்றினால், உங்களுக்கோ அல்லது உங்கள் அன்புக்குரியவர்களுக்கோ எந்தவிதமான சேதமும் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here