நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைகள் சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

சென்னை, தஞ்சாவூர் மாவட்டத்தில் திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

கடந்த 06.07.2026 அன்று காலையில், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆர்சுத்திப்பட்டு திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளுக்கு அருகில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் மீது நெல் மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் சின்னபொண்ணு (55 வயது), க/பெ. (லேட்) காசிநாதன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையுமடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் லேசான காயம் அடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சகுந்தலா (வயது 25), க/பெ.முருகானந்தம் என்பவருக்குச் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here