பள்ளம் தோண்டி குடியேற போவதாக அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ளது பாறைக்குட்டம் கிராமம்.
இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அப்பகுதியில் வீடு கட்டுவதற்காக 309 பேருக்கு அரசால் பட்டா நிலம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் அந்த இடத்திற்கு அருகே காற்றாலை அமைக்க சில தனியார் நிறுவனங்கள் இடத்தை தேர்வு செய்தது. அந்த பகுதியில் காற்றாலைக்கு பள்ளம் தோண்டி காங்கிரீட் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பணி நடைபெறும் இடத்திற்கு சென்று போராட்டம் நடத்தினர்.
மேலும் காற்றாலை எந்திரத்தை ஏற்றி வந்த லாரியையும் சிறை பிடித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த இடத்திற்கு அருகே எங்களது பட்டா நிலம் உள்ளது. இப்போது காற்றாலை அமைத்தால் நாங்கள் குடியிருக்க முடியாது.
எனவே இந்த பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில் இந்த இடத்தில் உடனடியாக பள்ளம் தோண்டி அதில் குடியேறும் போராட்டம் நடத்துவோம் என்றனர்.