காப்பார்-
பாலர்பள்ளி மாணவர்களுக்கு நேரடியாகப் பாடம் போதிப்பதில்தான் மகிழ்ச்சி. அவர்களுக்குரிய சந்தேகங்களை நேரடியாக களைவதிலும் மன நிறைவாக இருக்கிறது எனக் கூறுகிறார் காப்பார் செஞ்சுமான் மாஞ்சா பாலர்பள்ளி உரிமையாளர் ஆர்.ரஞ்சனி லதா.
கடந்த ஓராண்டு காலமாக மாணவர்களை நேரடியாகச் சந்திக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தோம். இயங்கலை வழி பாடங்களை அந்த பிஞ்சுகளுக்கு போதிப்பதில் அவ்வளவு திருப்தியில்லை.
அது எளிதானதும் அல்ல எனக் குறிப்பிட்ட அவர், பலருக்கு அதன் அடிப்படைகள் புரியாமல் விளையாட்டுத் தனமாகவே இருந்தனர். சின்னஞ்சிறு அரும்புகள் செய்யும் குறும்புகளை நேரடியாகச் சந்திப்பதிலும் அவர்களின் பிஞ்சுக் கைகளைப் பிடித்து பாடம் சொல்லிக் கொடுப்பதிலும் உள்ள மகிழ்ச்சிக்கு அளவே இல்லையென ரஞ்சனி லதா தெரிவித்தார்.
20 ஆண்டுகளுக்கும் மேல் பாலர்பள்ளி நடத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், கடந்தாண்டு முழுவதும் பாலர்பள்ளி நடைபெறாமல் வெறிச்சோடிக் கிடந்தததால் ஒரு வித சோகம் தங்களை ஆட்கொண்டதாகக் குறிப்பிட்டார் அவர்.
சில வேளைகளில் மாணவர்களுக்கு தொலைபேசி வழி தொடர்புகொண்டு பேசுவதன் வழி திருப்தியடைவோம் .
இவ்வாண்டு 25 மாணவர்கள் தங்களின் பாலர்பள்ளியில் இணைந்திருக்கின்றனர் விஜயாள், நிஷா என்ற இரு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்கள் இப்பொழுது நேரடியாக வந்து கல்வி கற்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதுடன் பாலர்பள்ளி பரப்பரப்பாகக் காணப்படுவதாகவும் ரஞ்சனி குறிப்பிட்டார்.
-பி.ஆர்.ஜெயசீலன்