ஹெராயின் கடத்திய இலங்கை படகு சிக்கியது

அரபிக் கடலில் அதிரடி,ஆயுதங்கள், – 6 சிங்களர் கைது

கேரளாவின் அரபிக் கடலில் விழிஞ்சம் கடற்கரைக்கு அருகே ஹெராயின் மற்றும் ஆயுதங்கள் கடத்திச் சென்ற இலங்கை படகு பிடிபட்டது. இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த 6 சிங்களர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை;

உளவுத் தகவல் அடிப்படையில் கேரளாவின் விழிஞ்சம் கடற்கரைக்கு அப்பால், ‘ரவிஹன்சி’ என்ற பெயரில் சென்ற இலங்கை படகை இந்திய கடலோரக் காவல் படை மற்றும் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் இம்மாதம் 25ம் தேதியன்று இடைமறித்தனர். விழிஞ்சம் துறைமுகத்துக்க அந்த படகு கொண்டுவரப்பட்டது.

 

அதில் சோதனையிட்டபோது, 300.323 கிலோ ஹெராயின், 5 ஏ.கே.-47 துப்பாக்கிகள், 1000 9 எம்.எம் தோட்டாக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. படகின் தண்ணீர் தொட்டிக்குள், 301 பாக்கெட்டுகளில் ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

 

இதில் பறக்கும் குதிரை சின்னம் இருந்தது. இவற்றோடு போலி ஆவணங்கள் பலவும் கைப்பற்றப்பட்டன. இந்த ஆயுதங்களும், ஹெராயினும் ஈரானின் சாபகர் துறைமுகத்திலிருந்து கொண்டு வரப்பட்டு இலங்கை படகிடம் ஒப்படைக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

 

இதையடுத்து இந்திய கடல் பகுதி வழியாக ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்திச் சென்ற இலங்கையைச் சேர்ந்த நந்தனா, தாசப்பிரியா, குணசேகரா, செனாரத், ரணசிங்கா, நிசாங்கா ஆகிய ஆறு பேரை போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் இம்மாதம் 27 ஆம் தேதியன்று கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்தனர்.

 

பாகிஸ்தானைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு, இதில் தொடர்பிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. அரபிக் கடல் பகுதியில் அதிகளவிலான ஹெராயின் போதைப் பொருட்களை இந்திய அதிகாரிகளும், இதர அமலாக்கப் பிரிவினரும் பறிமுதல் செய்து வருகின்றனர். அதனால் இந்த கடத்தல் கும்பலுக்கும், அவர்களுக்கும் தொடர்பிருக்கலாம் எனத் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here