சென்னை: கொரோனா கட்டுப்பாடுகள் பலன் தரவில்லை எனில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த நேரிடும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வௌவதை கருத்தில் கொண்டும் பொதுமக்கள் நலன் கருதியும் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஏப்ரல் 30 நள்ளிரவு சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளது.
நோய் தொற்றைக் கட்டுப்படுத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கு நாளை முதல் முற்றிலுமாக தடை விதித்தும் ஒரு செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தும் ஏப்ரல் 8-ல் அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த முயற்சியில் பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேரத்தில் கொரோனா ஊரடங்கு (Curfew) மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும்.தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த கொரோனா தொற்று இரண்டாவது அலையை சமாளிக்க அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.