–சீரமைக்க ரூ.3.48 கோடி
பெஷாவர்:
பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட ஹிந்து கோவிலை சீரமைக்க, கைபர் பக்துன்க்வா மாகாண அரசின் சார்பில், 3.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், கைபர் பக்துன்க்வா மாகாணம் கராக் மாவட்டம் டெர்ரி கிராமத்தில், பழமை வாய்ந்த ஹிந்து கோவில், ஸ்ரீ பரமன்ஸ் ஜி மஹராஜ் சமாதி ஆகியவை இருந்தன.
இவற்றை முஸ்லிம் அமைப்பினர், கடந்த ஆண்டு டிச., மாதம் இடித்து சேதப்படுத்தினர். இதற்கு, நம் மத்திய வெளியுறவு அமைச்சகம், கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தது.
இதையடுத்து, ‘கோவில், சமாதி சீரமைப்பு பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும்’ என, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, கைபர் பக்துன்க்வா மாகாண அரசின் சார்பில், சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டன. இதற்கிடையே, கைபர் பக்துன்க்வா மாகாண ஹிந்துக்கள் அமைப்பினர், கடந்த மாதம் நடத்திய கூட்டத்தின் முடிவில், கோவிலை இடித்த முஸ்லிம் அமைப்பினரை மன்னிப்பது என, முடிவு செய்தனர்.
இந்நிலையில், கோவில் சீரமைப்பு பணிகளுக்காக, கைபர் பக்துன்க்வா மாகாண அரசு தற்போது, 3.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால், கோவில் சீரமைப்பு பணிகள், விரைந்து முடிவுக்கு வரும் என, தெரிகிறது.
கமெண்ட்: இடிப்பதற்கு முன் இயலாமையை சிந்தித்திருக்க வேண்டும். எதிலும் காலம் கடந்து ஞானம்.