போதை ஓட்டுநர்களால் ஏற்படும் விபத்து: வாழ்நாள் ஓட்டுநர் உரிமத் தடையுடன் கடும் தண்டனை விதிக்க யுனேஸ்வரன் வலியுறுத்தல்!

கோலாலம்பூர்:

து அல்லது போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டி, விபத்துகளின் மூலம் மரணம் அல்லது கடுமையான காயங்களை ஏற்படுத்துவோருக்கு வாழ்நாள் முழுவதும் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் ஆர். யுனேஸ்வரன் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக அவர் கூறுகையில், போதையில் வாகனம் ஓட்டுவோருக்கு வெறும் அபராதத்துடன் நிறுத்தாமல், கட்டாயச் சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.

இரண்டாவதாக சாலைப் போக்குவரத்துச் சட்டத்தை முழுமையாக மறுஆய்வு செய்து, போதையில் வாகனம் ஓட்டுவதை ஒரு சாதாரண போக்குவரத்து விதிமீறலாகப் பார்க்காமல், ‘பொதுப் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்’ (Public Safety Threat) என வகைப்படுத்த வேண்டும்.

அத்தோடு உரிமமின்றி இயங்கும் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும். குடியிருப்புப் பகுதிகள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

புகையிலைப் பொருட்களைப் போலவே, மதுபானங்களையும் கடைகளில் வெளிப்படையாகக் காட்சிப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் மற்றும் 24 மணிநேர மது விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் இரவு நேரப் போக்குவரத்துச் சோதனைகளை (Roadblocks) காவல்துறையினர் தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.

அண்மையில் ஜாலான் அம்பாங் பகுதியில் மதுபோதை ஓட்டுநரால் உயிரிழந்த ஏ. துரைசிங்கம் மற்றும் ஏ. மேனகா ஆகியோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின் துணையமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

“இனி ஒரு உயிர் கூட இது போன்ற பொறுப்பற்ற செயல்களால் பறிபோகக் கூடாது. மக்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும்,” என்று அவர் மிக உறுதியாகத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here