இங்கிலாந்து இளவரசர் பிலிப் உடல் நல்லடக்கம்!

இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்தவர் என்ற பெருமைக்குரிய இளவரசர் பிலிப் (99) கடந்த 9 ஆம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது இறுதிச்சடங்கு நேற்று (17.04.2021) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அவரது இறுதிச்சடங்கு புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெற்றது.

முன்னதாக அவர் உடல் வின்சர் கோட்டையில் இருந்து அவர் தன் விருப்பப்படி மாற்றியமைத்த லேன்ட்ரோவர் காரில் புனித ஜார்ஜ் தேவாலயத்திற்கு எடுத்து வரப்பட்டது. கொரோனா அச்சுறுத்தலால் இறுதி ஊர்வலத்தில் இளவரசர்கள் வில்லியம், ஹாரி, அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

ராணி எலிசபெத் நேரடியாக தேவாலயத்திற்கு காரில் வந்தார். அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய பின் ஹாரி பங்கேற்கும் முதல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

தேவாலயத்தில் பிரார்த்தனை, இறுதிச்சடங்குகள் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே நடந்தது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக இறுதிச்சடங்கில் 30பேர் மட்டுமே பங்கேற்றனர்.

இறுதிச்சடங்குகள் நிறைவடைந்ததும் இளவரசர் பிலிப் நாட்டுக்கு செய்த சேவை, அவரது தைரியம் போன்றவற்றை நினைவுகூர்ந்து வின்சரின் மதகுரு அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின் இளவரசர் பிலிப்பின் உடல் தேவாலாயத்தின் கீழ் தளத்தில், ‘ராயல் வால்ட்’ என்ற பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது அரச குடும்பத்தினர் இளவரசர் பிலிப்புக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here