700 கர்ப்பிணிகளுக்கமேல் பிரசவம் பார்த்தவர்

 

 110 வயதையும் கடந்து வாழும் மகா- ராசி

நூறாண்டுகாலம் வாழ்க. நோய் நொடி இல்லாமல் வாழ்க என்பது பல வேளைகளில் வாழ்த்தாக இருக்கும். அந்த வாழ்த்து  பலருக்கு 100 ஆண்டுகள் வாழ்வதை உறுதியாக்கித்தராது. அனால், அன்னம்மா பாட்டி  இதற்கு மாறானவர். இறைவனின் நல்லாசி பெற்ற மகராசி.

மலேசியாவிலேயே மிக வயதான மூதாட்டியாக ஏ. அன்னம்மா திகழ்கிறார். இவருக்கு 110 வயதாகி விட்டது. இளமைக் காலத்தில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 700 குழந்தைகளுக்குப் பிரசவம் பார்த்திருப்பதாக அவர்  சொன்னார்.

நாட்டு மருத்துவத் துறையில் இவர்  கைராசி ஆற்றல் மிக்கவராக உள்ளார். 19 வயதில் இவர் அப்போதைய மலாயாவுக்கு வந்தார். கிந்தாவேலி தோட்டத்தில் பால்வெட்டுத் தொழிலாளியாக வேலை செய்தார்.

ரப்பர் தோட்டத்தில் நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை செய்த இவர், பிரசவமும் பார்த்திருக்கிறார்.

எனக்கு 18 வயதாக இருந்தபோதே கர்ப்பிணிகளுக்குப் பிரசவம் பார்க்கத் தொடங்கினேன். இந்தியாவில் என் தாயாருடனும் பாட்டியுடனும் வசித்தபோது பிரசவம் பார்க்கும் வழிமுறைகளைக் கற்றுக் கொண்டேன்.

இதனால்தான் பேராக் மாநிலத்தில் உள்ள கிந்தாவேலி தோட்டத்தில் கர்ப்பிணிகளுக்குப் பிரசவம் பார்க்கும் வாய்ப்பை எனக்கு வழங்கியதோடு என் மீது அவர்கள் நம்பிக்கையும் வைத்திருந்தார்கள் என்கிறார்  அவர்.

பத்து காஜா தொடங்கி தஞ்சோங் துவாலாங் வரை எல்லா இனங்களையும் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களை எனக்குத் தெரியும் என்று அவர் பெர்னாமாவுக்கு அளித்த பேட்டியில் சொன்னார்.

தமிழிலேயே அவர் பேசியபோது அவருடைய பேரன் எஸ். எழிலன் (வயது 41) அதனை மொழி பெயர்த்தார். மருத்துவச்சியாக இருந்தபோது அண்டை வீட்டுக்காரருடன் நான் மிகவும் அணுக்கமாகப் பழகினேன்.

இன, சமய வேறுபாடு இன்றி அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ்ந்த காலம் அது.
அமைதியுடனும் நட்புணர்வுடனும் அவர்கள் வாழ்ந்தார்கள். சொந்தக் குடும்பத்தைப் போல அன்பு செலுத்தி வாழ்ந்து வந்தோம் என்றார் அன்னம்மா.

முன்பு மலாய்க்காரர்களும் சீனர்களும் என் அண்டை வீட்டுக்காரர்களாக இருந்தார்கள். அவர்கள் நன்றாகத் தமிழ் பேசுவார்கள். பெருநாள் காலத்தில் அவர்கள் என் வீட்டிற்கு வந்து சேலைகளை  பெற்றுச் செல்வார்கள் என்றும் அவர்  சொன்னார்.

அது ஒரு பொற்காலம். மறக்க முடியாத காலம். அதை நினைத்து ஏங்காத நாளே இல்லை. அவர்களுடன் என் பிள்ளைகளும் விளையாடி மகிழ்ந்த பொற்காலம் அது என்று கூறி பூரித்துப்போகிறார்.

பெருநாள் இல்லாத காலத்திலும் நாங்கள் மிக நெருக்கமாகவே பழகி வந்தோம் என்று அன்னம்மா சொன்னதில் இன்றைய இன இடைவெளி பாலவனமா இருப்பதை நன்கு உணரமுடிகிறது.

இந்த நல்லெண்ணமும் நட்புறவும் ஒருமைப்பாடும் நீடித்து நிலைக்க வேண்டும். சுபிட்சமிக்க ஒரு நாட்டிற்காக இந்தத் தலைமுறையினரும் இதனைப் பேணிக் காக்க வேண்டும் என்ற மன உறுத்தல் அதிகமாகவே இருக்கிறது என்று கூறியபோது முகத்தின் மாற்றம் அகத்தைப் பிரதிபலித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here