கொரோனாவின் 2-ஆவது அலையில் சிக்கியுள்ள இந்தியாவுக்கு ஆக்சிஜன் தயாரிப்பு அலகுகள், தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகள் போன்ற மருத்துவ தளவாடங்களை அனுப்பிவைத்து 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த உதவிகளை அளித்துள்ளன.இதன் தொடர்ச்சியாக ஐ.நா.வின் பல்வேறு நிறுவனங்களும் இந்தியாவுக்கு ஏராளமான உதவிகளை அனுப்பியுள்ளன.
இந்நிலையில், யுனிசெப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐ.நா. மக்கள் நிதியம் இணைந்து 10 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகள், 1 கோடி மருத்துவ முககவசங்கள், 15 லட்சம் முக பாதுகாப்பு கவசங்கள் ஆகியவற்றை அனுப்பி வைத்துள்ளன.
இதைத்தவிர தடுப்பூசிகளை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கு தேவையான குளிரூட்டும் அலகுகளையும் யுனிசெப் வழங்கியிருக்கிறது. அத்துடன் வென்டிலேட்டர், ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளையும் ஐ.நா. குழு வழங்கி இருக்கிறது.இதைப்போல கொரோனா பரிசோதனை கருவிகள், விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் வெப்ப பரிசோதனை கருவிகள் போன்றவற்றை ஐ.நா. நிறுவனங்கள் வழங்கி உள்ளன. மேலும் தற்காலிக ஆஸ்பத்திரிகள் அமைப்பதற்காக கூடாரங்கள், படுக்கைகளை உலக சுகாதார நிறுவனம் வழங்கி இருக்கிறது.
இவை மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் உதவுவதற்காக ஐ.நா.வின் சிறப்புக் குழுவினர் களத்திலும் இறங்கி பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக தேசிய அளவிலும், உள்ளூர் மட்டத்திலும் இந்த மருத்துவ நிபுணர்கள் களத்தில் உள்ளனர்.
மேலும், நாடு முழுவதும் 1.75 லட்சம் தடுப்பூசி மையங்களை மேற்பார்வையிடும் பணிகளுக்கு யுனிசெப் மற்றும் ஐ.நா. வளர்ச்சி திட்டம் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த தகவல்களை ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெசின் செய்தி தொடர்பாளரான ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்துள்ளார்.