கோலாலம்பூர்: நாட்டில் நடமாட்ட கட்டுப்பாடு ஒழுங்கு நடைமுறையில் இருந்தாலும், மலேசியர்கள், குறிப்பாக வானியல் ஆர்வலர்கள் நேற்றிரவு தோன்றிய சந்திர கிரகணத்தை பார்க்கத் தவறவிடவில்லை.
தேசிய கோள்கள் ஆராய்ச்சி அவதானிப்பு மையத்தின் முதன்மை உதவி இயக்குனர் மொஹமட் ஜாம்ரி ஷா மாஸ்டர் கூறுகையில், இது போன்ற சந்திர கிரகணம் சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு, 2003 ஆம் ஆண்டு கடைசியாக தோன்றியது.
“சூப்பர் ஃப்ளவர் அல்லது பிளட் மூன்” என்று அழைக்கப்படும் இச் சந்திர கிரகணத்தின் போது நிலவானது பூமிக்கு மிக நெருக்கமாகவும் வரும் போது வழக்கத்தை விட 7% பெரியதாக இருக்கும் என்று அவர் கூறினார்.
“முழுச்சந்திர கிரகணத்தின் போது, சுமார் 15 நிமிடங்கள் சந்திரன் சிவப்பு நிறமாக இருந்தது. இந்த நிறமாற்றத்தின் காரணமாகவே இரத்த நிலா (blood moon) என்று அழைக்கின்றனர். இருப்பினும், சூப்பர் மூன் மற்றும் ஃப்ளவர் மூன் இரவு முழுவதும் விடியல் வரை காணப்படுகிறது, என்று அவர் நேரடி ஒளிபரப்பின் போது கூறினார்.
மாலை 4.47 மணி முதல் இரவு 9.49 மணி வரை சந்திர கிரகணம் நடந்தது. இருப்பினும், கோலாலம்பூரில் பலத்த மழை மற்றும் அடர்ந்த மேகங்கள் காரணமாக, இரவு 7.26 மணிக்கு முடிவடைந்த இரத்த நிலவு நிகழ்வை தலைநகருக்கு மேலே உள்ள வானத்தில் காண முடியவில்லை என்றும் கூறினார்.