பெட்டாலிங் ஜெயா: ஜூன் 1ஆம் தேதி அமலுக்கு வரவிருக்கும் முழு நடமாட்டு கட்டுபாட்டு ஆணை (எம்சிஓ) தொடங்குவதற்கு முன்னதாக மலேசியர்கள் பயம் அடைய வேண்டாம் என்று உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முழு எம்சிஓ அறிவிப்பு காரணமாக பீதி அடைய வேண்டாம். தேவையின் அடிப்படையில் பொருட்களை வாங்குமாறும் எல்லோரும் புத்திசாலித்தனமாக செலவிட்டால் போதுமான சப்ளை இருக்கும் என்று சனிக்கிழமை (மே 29) ஒரு முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (மே 28) இரவு, பிரதமர் டான் ஸ்ரீ முஹிடி யாசின் ஜூன் 1-14 முதல் நாடு முழுவதும் முழு எம்சிஓ நடைமுறைக்கு வரும் என்று அறிவித்தார்.அத்தியாவசிய பொருளாதார மற்றும் சேவைத் துறைகளைத் தவிர, மற்ற அனைத்து துறைகளும் இந்த காலகட்டத்தில் செயல்பட அனுமதிக்கப்படாது என்றார்.
பிரதமர் அலுவலகம் (பி.எம்.ஓ) வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளிக்கிழமை (மே 28) கோவிட் -19 தொற்று மிகவு அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது 8,290 புதிய தொற்றும் மொத்தம் 70,000 க்கும் மேற்பட்டோர் இன்னும் சிகிச்சை பெற்று வருவதையும் காட்டுகிறது.