கோவிட் -19 தடுப்பூசி போட மறுப்பவர்களின் தொலைபேசி எண்கள் முடக்கப்படும் என பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில சிறப்பு சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் ஹம்மது ராசா தெரிவித்தார்.
கொரோனா பரவலை தடுக்கவும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தவும் தடுப்பூசி ஒன்றே தீர்வு என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப்பில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் முதல் டோஸை சுமார் 3 லட்சம் பேர் செலுத்திக்கொண்டனர்.
ஆனால், இரண்டாம் டோஸை போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வராதவர்களின் தொலைபேசி எண்கள் முடக்கப்படும் என பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை நிறுத்திவைக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு தடுப்பூசி போட்டவர்கள் சினிமா அரங்குகள் மற்றும் உணவகங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள், திருமண அரங்குகள் திறக்கப்படும் என்றும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்போது முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் என்றும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.