இனியும் தாமதம் வேண்டாம்
வழக்கறிஞர் மன்றம் வேண்டுகோள்!
கோலாலம்பூர்-
அரசாங்கம் இனியும் காலதாமதம் செய்யாமல் நாடாளுமன்றத்தை விரைந்து கூட்ட வேண்டும் என்று மலேசிய வழக்கறிஞர்கள் மன்றத் தலைவர் ஏ.ஜி. காளிதாஸ் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தை விரைந்து கூட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் போதிலும் அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார்.
கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
ஆனால் அதே சமயம் நாட்டின் நிர்வாகப் பணிகளிலும் முனைப்புக் காட்டப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இங்கிலாந்து போன்ற மற்ற நாடுகளில் நாடாளுமன்றக் கூட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. அவை மெய்நிகர் மூலமாக நடக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
மெய்நிகர் வாயிலாக நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறுவதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம் என்றும் காளிதாஸ் குறிப்பிட்டார்.








