கோலாலம்பூர்-
நாடாளுமன்றம் கூடிய விரைவில் கூட வேண்டும் என மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தபா பில்லா ஷா கருதுவதாக அரண்மனை உயர் அதிகாரி டத்தோ இண்ட்ரா அகமட் ஃபடில் சம்சுடின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மலாய் ஆட்சியாளர்களுக்கு இடையிலான சந்திப்புக் கூட்டம் இஸ்தானா நெகாராவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாமன்னர் தலைமையேற்றார்.
அரசியல் கட்சித் தலைவர்கள், 2020 அவசரகாலப் பிரகடன சிறப்புச் செயற்குழுவினர் ஆகியோரின் கருத்துகளையும் அரசாங்க இலாகாக்களைச் சேர்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளையும் மாமன்னர் கேட்டறிந்திருந்தார்.
இதன் அடிப்படையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கூடிய விரைவில் நடைபெற வேண்டும் என மாமன்னர் கருதுகிறார்.
தேசிய மீட்சித்திட்டம், அவசரநிலைப் பிரகடனச் சட்டங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதிக்க இது வழிவகுக்கும்.
இது தவிர நாட்டில் கோவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தற்போது தடுப்பூசித் திட்டம்தான் ஒரேயொரு வியூகத் திட்டம் எனக் கருதப்படுகின்றது.
இதன் அடிப்படையில் கோவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவலும் துரிதமாக முறியடிக்கப்பட வேண்டும் எனவும் மாமன்னர் எதிர்பார்க்கின்றார்.
இதன் அடிப்படியில் கூடிய விரைவில் எதிர்ப்புச் சக்தி பெற்ற சமூகக் குறிக்கோளை அடைவதற்கு அரசாங்கம் தடுப்பூசித் திட்டத்தைத் துரிதப்படுத்த வேண்டும்.
கட்டமைப்பை எளிமையாக்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மாமன்னர் கருதுவதாக அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்சியடையச் செய்யவும் கோவிட்-19 வைரஸ் தொற்றினை எதிர்கொள்ளவும் சிறப்பாகச் செயல்பட வலுவான – நிலையான அரசாங்க நிர்வாகம் தேவை எனவும் மாமன்னர் கருதுகின்றார் என்றும் அகமட் ஃபடில் தம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.