புத்ரா ஜெயா, (ஜூன் 22) :
மலேசியா எம்.ஆர்.என்.ஏ (MRNA) தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இறங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ அடாம் பாபா தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் மேற்பார்வையின் கீழ் செயல்படும் மருத்துவ ஆய்வுக்கழகம் மற்றும் மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்தத் தடுப்பூசியை தயாரித்து வருவதாகவும் நேற்று (ஜூன் 21) நடைபெற்ற தேசிய கோவிட் -19 எதிர்ப்பு திட்டத்தின் செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
இத்தடுப்பூசி தயாரிப்பு முடிந்ததும், அதனை முதல் கட்டமாக சிறிய , பெரிய மிருகங்களுக்கு செலுத்தி பரிசோதித்த பின்னரே, மனிதர்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இரண்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட சில மருத்துவ பணியாளர்கள் கோவிட் -19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளது தொடர்பில் கருத்துரைத்த அமைச்சர், இதுவரை 1,480 தனி நபர்கள் மீண்டும் கோவிட் -19 தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் அவர்களில் ஒருவர் மட்டுமே நுரையீரல் பாதிக்கப்பட்டு செயற்கை சுவாசக்கருவியின் உதவியை நாடியுள்ளார் ஆனால் ஏனையவர்கள் அனைவரும் நுரையீரல் பாதிக்கப்படாது முதல் கட்ட அளவில் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.




















