கார்த்திகை ஞாயிறு விரதம்

கார்த்திகை மாதம் விரதம் அனுஷ்டிப்பதால் இன்னல்கள் நீங்கி சுபிட்சம் பெருகும். அவற்றில் கார்த்திகை மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யப்படும் வழிபாடு மற்றும் கடைபிடிக்கப்படும் விரதம் மிக முக்கியமானதாகும்.

கார்த்திகை ஞாயிறு விரதம் என்பது கார்த்திகை முதல் ஞாயிறு அன்று தொடங்கப்பட்டு, தொடர்ந்து 12 வாரங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைபிடிக்கப்படும் விரதமாகும். நவகிரகங்கள் இந்த விரதத்தை கடைபிடித்து தான் பல வரங்களைப் பெற்றனர். எனவே இந்த விரதமுறையை கடைபிடிப்பதால் நவகிரக பாதிப்புகள் நீங்கி, நன்மை கிடைக்கும். கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி இறைவனை வழிபட்டால் எல்லா பாவங்களும் விலகும். இப்படி நீராடுவதை, கார்த்திகை நீராடல் என்று கூறுவார்கள். பிரிந்த கணவன், மனைவி ஒன்று சேருவதற்கான அற்புதமான விரத நாள் கார்த்திகை ஞாயிறு விரதம்.

இப்படி பல சிறப்புமிக்க கார்த்திகை மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் சோளிங்கர் சென்று அங்குள்ள யோக நரசிம்மரை தவறாமல் வழிபடுவதால் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும். கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைக்கும், சோளிங்கர் நரசிம்ம பெருமாளுக்கும் அப்படி என்ன தொடர்பு என சிலர் கேட்கலாம். வருடத்தின் அனைத்து நாட்களும் யோக நிலையில் காணப்படும் சோளிங்கர் நரசிம்மப் பெருமாள், கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தன்னுடைய பக்தர்களை கண் திறந்து பார்த்து, அருளாசி வழங்கும் அற்புத நிகழ்வு இன்றும் நடக்கிறது. இந்த நாளில் சோளிங்கருக்கு நேரில் சென்றோ அல்லது வீட்டில் இருந்த படி நரசிம்மரை நினைத்து, விரதம் இருந்து வழிபடலாம்.

நாளை என்பது நரசிம்மருக்கு இல்லை என்பார்கள். தன்னை வழிபடும் பக்தர்களை ஒரு நிமிடம் கூட காக்க வைக்காமல் உடனே வந்து அருள் செய்து, அவர்கள் வேண்டிய வரங்களை அள்ளிக் கொடுக்கக் கூடியவர் நரசிம்மர். அப்படிப்பட்ட நரசிம்மரை கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் வெறும் 24 நிமிடங்கள் மட்டும் வழிபட்டாலே போதும். விஸ்வாமித்ரர், கார்த்திகை ஞாயிற்றுக்கிழமையில் நரசிம்மரை விரதம் இருந்து 24 நிமிடங்கள் வழிபட்டு தான் பிரம்ம ரிஷி பட்டத்தை பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. அதனால் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் நரசிம்மருக்கு பிடித்தமான பானகம் நைவேத்தியம் செய்து படைத்து, அவரை நினைத்து, 24 நிமிடங்கள் மனம் உருகி பிரார்த்தனை செய்தால், நீங்கள் என்ன வேண்டுதல் வைத்தாலும் அதை அப்படியே, மிக விரைவிலேயே நிறைவேற்றிக் கொடுப்பார் நரசிம்மர்

.கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் நரசிம்மரை வேண்டினால் மனம் மற்றும் உடல் தொடர்பான பிரச்சனைகள், எதிரிகள் தொல்லை, கடன் தொல்லை, பில்லி, சூனியம், திருமண தடை, முன்னேற்றத்தில் தடை ஆகியவை தீரும். வேண்டிய வரங்கள் உடனே கிடைக்கும். கார்த்திகை ஞாயிற்றுக்கிழமையில் நரசிம்மருக்கு துளசி படைத்து, அவரது 108 திருநாமங்களைச் சொல்லி வழிபடுவது இன்னும் சிறப்பானதாகும். வாழ்வில் எப்படிப்பட்ட தீராத துன்பத்தில் சிக்கிக் கொண்டு இருந்தாலும் இந்த நாளில் நரசிம்மரை வழிபடுவதால் அதிலிருந்து விடுபட உடனடியாக வழி பிறக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here