சிங்கப்பூர், (ஜூலை 6):
சுமார் 2,100,000 (21 லட்சம்) வெள்ளி மதிப்புள்ள மின்சிகரெட்டுகளையும் அவற்றுடன் தொடர்புடைய சாதனங்களையும் சிங்கப்பூருக்குள் கடத்திய குற்றத்திற்காக 14 மலேசிய ஆடவர்களுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

சுகாதார அறிவியல் ஆணையமும் (HSA) குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையமும் (ICA) இணைந்து நேற்று (ஜூலை 5) இதனை தங்களது கூட்டறிக்கையில் தெரிவித்திருந்தன.
கைது செய்யப்பட்டவர்கள் 22 வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் பிடிபட்ட ஆடவர்கள் அனைவரும் மலேசிய நிறுவனத்தைச் சேர்ந்த லோரி ஓட்டுநர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்களுமாவர்.
கடந்த ஜூன் 7 ஆம் தேதி , மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் கோழிகளை ஏற்றி வருவதற்குப் பயன்படுத்தப்பட்ட லோரிகளை குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிகள் இடைமறித்து சோதனை நடத்தினர். அப்போது மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட ஏழு லோரிகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் மறைத்து கடத்தி வரப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

லோரி ஓட்டுநர்களும் லோரிகளில் இருந்த உதவியாளர்களும் சிங்கப்பூரில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அந்தப் பொருள்களைக் கொண்டு செல்லுமாறு உத்தரவிடப்பட்டது என்று சுகாதார அறிவியல் ஆணையம் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
அங்கிருக்கும் நபர் ஒருவர் தடை செய்யப்பட்ட இந்தப் பொருள்களைப் பெற்றுக்கொள்ள திட்டம் வகுக்கப்பட்டு இருந்ததாகவும் தெரியவருகின்றது.
54,392 மின்சிகரெட்டுகளும் அவை தொடர்பான சாதனங்களும் லோரிகளில் கடத்தி வரப்பட்டது தொடர்பாக 14 மலேசிய ஆடவர்கள் கைது செய்யப்பட்டு ,கடந்த வாரம் திங்கட்கிழமை (ஜூன் 28) அவர்களுக்கு வெவ்வேறு காலகட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதிகபட்சமாக இரு மாத சிறைத் தண்டனை விதிகப்பட்டது.
கைப்பற்றப்பட்ட பொருள்களின் மதிப்பு சுமார் 21 இலட்சம் வெள்ளியாகும். சிங்கப்பூரில் அதிகமான அளவு மின்சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை என்றும் HSA தெரிவித்தது .
மின்சிகரெட்டுகளையும் அவை தொடர்பான சாதனங்களையும் இறக்குமதி செய்வது, விநியோகம் செய்வது, விற்பது, விற்பனைக்காக வைத்திருப்பது போன்றவை குற்றங்களாகும்.
முதல்முறை இக்குற்றங்களில் ஈடுபட்டு நீதிமன்றத்தில் குற்றவாளி என உறுதி செய்யப்படுவோருக்கு $10,000 சிங்கப்பூர் டாலர் (ஏறத்தாழ 30,000 வெள்ளி) வரையிலான அபராதம், ஆறு மாதம் வரையிலான சிறை போன்றவை தண்டனைகளாக விதிக்கப்படலாம். மறுமுறை இதே குற்றங்களில் ஈடுபடுவோருக்கான தண்டனை இரட்டிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வாங்குவதும் பயன்படுத்துவதும் குற்றங்களாகும். அந்தக் குற்றங்களுக்கு $2,000 சிங்கப்பூர் டாலர் (ஏறத்தாழ 6,000 வெள்ளி) வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் சிங்கப்பூர் ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.









