பெட்டாலிங் ஜெயா, (ஜூலை 7) :
சிரம்பான் மாவட்டத்தில் கோவிட் -19 தொற்றுக்கள் அதிகரித்ததன் காரணமாக சிரம்பானில் ஜூலை 9 முதல் ஜூலை 22 வரை கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (EMCO) அமலில் இருக்கும்.
இந்த கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு சிரம்பான், நெகிரி செம்பிலான் உட்பட முக்கிம் அம்பாங்கான், முக்கிம் லாபு, முக்கிம் லெங்கெங், முக்கிம் பந்தாய், முக்கிம் ரந்தாவ், முக்கிம் ராசா, முக்கிம் சிரம்பான், முக்கிம் செதூல் பகுதிகளிலும் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 9) முதல் அமலுக்கு வருகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 5,504 தொற்றுக்கள் செயலில் உள்ளதைக் கருத்தில் கொண்டே EMCO அமல் படுத்தியதாக, இன்று புதிதாக நியமிக்கப்பட்ட துணைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.
“தொற்றுக்கள் இன்னும் பரவி வருவதாகவும், குறித்த வட்டாரத்தில் அதிக தொற்று வீதம் இருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் கண்டறிந்துள்ளது. கோவிட் -19 பரவலைத் தடுக்க உடனடி முயற்சிகள் தேவை” என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.




















