ஜில் பைடன் பங்கேற்பு
வாஷிங்டன்:
அமெரிக்காவில், 9 இந்திய வம்சாவளி மாணவ – மாணவியர் நாளை பங்கேற்கும், ‘ஸ்கிரிப்ஸ் தேசிய ஸ்பெல்லிங் பீ’ இறுதிப் போட்டியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி, ஜில் பைடன் பங்கேற்கிறார்.
அமெரிக்காவில், ‘ஸ்கிரிப்ஸ் தேசிய ஸ்பெல்லிங் பீ’ எனப்படும், மிக கடினமான ஆங்கிலs சொற்களை தவறின்றி எழுதும் போட்டி, 1925 முதல் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. மாணவர்களுக்காக நடத்தப்படும் இந்தப் போட்டியில், கடந்த, 20 ஆண்டுகளாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக, கடந்த ஆண்டுக்கான ஸ்பெல்லிங் பீ போட்டி நடத்தப்படவில்லை.நடப்பு ஆண்டுக்கான ஆரம்பக்கட்ட போட்டிகள், ‘ஆன்லைன்’ வாயிலாக நடத்தி முடிக்கப்பட்டது. இதில், 11 மாணவ – மாணவியர், இறுதி போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
அதில், 9 பேர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இறுதிப் போட்டி, புளோரிடா மாகாணத்தின் ஆர்லாண்டோ அருகே உள்ள, ‘வால்ட் டிஸ்னி வேர்ல்டு ரிசார்ட்ஸ்’ என்ற இடத்தில் நடைபெறுகிறது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி, ஜில் பைடன் பங்கேற்று, இறுதிப் போட்டியாளர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவிக்க உள்ளார்.