உலகின் கவனத்தை ஈர்த்த
கல்விப் போராளி…
உலகப்பெண்களில் ஒருவராகப் பேசப்படுகின்றவர் மலாலா. இவர் தீவிர்வாதிகலால் சுடப்பட்டு மறு அவதாரம் எடுத்தவர் மட்டுமல்ல. பெண்களுக்குக் கல்வி முக்கியம் என்று போராடிவருகின்றவர்.
2013 ஆம் ஆண்டு மலாலா தனது 16ஆவது பிறந்தநாளான ஜூலை 12- இல் ஐக்கிய நாடுகள் சபையை தொடர்புகொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வை ஐக்கிய நாடுகள் சபை “மலாலா தினம்” என்று குறிப்பிட்டது.
பெண் கல்வி உரிமைக்காகவும், குழந்தைகளின் கல்விக்காகவும் தொடர்ந்து பிரசாரம் செய்து வரும் மலாலாவுக்கு, 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஐ.நா.வின் இளைஞர் தூதராகவும் அவர் இருக்கிறார்.
பெண்களின் உரிமை மட்டுமல்லாமல் சர்வதேச அமைதிக்காகவும் குரல் கொடுத்து வருகிறார் மலாலா. இந்தியா, பாகிஸ்தானின் உண்மையான எதிரி வறுமை, பாகுபாடு, சமத்துவமின்மை என்று சுட்டிக்காட்டிய மலாலா, இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் சண்டையிடாமல், கைகோர்த்து அதற்கு எதிராகப் போராட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள மக்கள் நிம்மதியாக வாழ விரும்புகிறார்கள், இரு நாடுகளும் நல்ல நண்பர்களாக மாறுவது தான் தனது கனவு என்றும் குறிப்பிடுகிறார் மலாலா.