புத்ராஜெயா, ஜூலை 15 :
கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் செலுத்திக் கொண்டவர்கள் பயணம் செய்யவோ அல்லது உணவகங்களில் உணவருந்தவோ அனுமதிப்பது உட்பட, பல கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்து வருகின்றது என்று பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.
நாடு இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதை படிப்படியாக சரிசெய்து வருவதால் இது தேசிய மீட்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்றும் பிரதமர் கூறினார்.
“இரண்டு தடுப்பூசி அளவைப் பெற்றவர்களுக்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று நான் கேட்டுள்ளேன். இது அவர்களின் பயணத்திற்காகவோ அல்லது உணவகங்களில் உணவருந்தவோ இருக்கலாம் என்றும் கோவிட் -19 நோயைக் கட்டுப்படுத்துவதில் நாம் போராடும் அதே வேளை, படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்பதற்கு இது வழிவகுக்கும்” என்று அவர் கூறினார்.
“தேசிய கோவிட் -19 மீட்புத் திட்டம் இந்த ஆண்டு இறுதி வரை எடுக்கும், எனவே பொறுமையாக இருக்க வேண்டும் என்று வியாழக்கிழமை (ஜூலை 15) இங்குள்ள பெண்கள், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தில் தேசிய ப்ரிஹாடின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான தயாரிப்புகளைக் கண்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் கூறினார்.
கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான நாட்டின் போரில் தேசிய தடுப்பூசி திட்டம் ஒரு “சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம்” போன்றது என்றும் அவர் கூறினார்.
“நாங்கள் ஒரு நாளில் 421,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட முடிந்தது, இதை தொடர்ந்தும் கடைப்பிடிக்க முடியும் என்றும் நம்புகிறோம். இப்போது, எங்கள் கவனம் கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏற்படும் அதிக தொற்றுப்பரவலை கட்டுப்படுத்துவதே எங்கள் இலக்கு என்றும் தொடர்ச்சியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் கோவிட் -19 நோய்த்தொற்றுகளை சிறப்பாகச் சமாளிக்க முடியும், ”என்றும் முஹிடின் கூறினார்.
“தடுப்பூசி விநியோகங்கள் இந்த மாதத்திலும் அடுத்த மாதத்திலும் தொடர்ந்து அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், எனவே இந்த ஆண்டின் இறுதிக்குள் தேசிய மீட்பு திட்டத்தை நிறைவு செய்வதற்கான எங்கள் திட்டத்தை நாங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியும்” என்று பிரதமர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பெண்கள், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரீனா ஹருன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில், ப்ரிஹாடின் உணவு கூடை திட்டத்திற்காக ஐந்து கோர்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து முஹிடின் 16 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள பங்களிப்புகளைப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.