ஐஸ்கிரீம் என்று சொன்னாலே போதும் பலருக்கு நாவில் எச்சில் ஊறும். அந்த அளவுக்கு ஐஸ்கிரீம் மீது காதல் கொண்டிருப்பர். ஐஸ்கிரீம் பிடிக்காது என்று சொல்பவர்கள் மிக மிக அரிது. வெயிலோ, மழையோ, பனிக்கலாமோ எதுவாக இருந்தாலும் சரி ஐஸ்கிரீம் வாகனத்தையோ அல்லது ஐஸ்கிரீம் கடையையோ பார்க்கும் சிலர் அதை வாங்கி சாப்பிடாமல் வரமாட்டார்கள்.
அப்படி நீங்களும் தீவிர ஐஸ்கிரீம் பிரியராக இருந்தால் உங்களுக்கு ஒரு ஆடம்பரமான அதிர்ச்சி செய்தி காத்திருக்கிறது. பொதுவாக கடைகளில் ஹோம்மேட் ஐஸ்கிரீம் அல்லது பிராண்டட் ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படும். அவற்றின் விலை அவ்வளவு ஒன்றும் அதிகமாக இருக்க போவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் துபாயில் இந்த ஒரு குறிப்பிட்ட இஸ்கிரீமுக்கு மட்டும் ரூ.60,000 செலவிட வேண்டும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆமாம், உலகிலேயே மிக விலை உயர்ந்த ஐஸ்கிரீம் துபாயில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
துபாயின் ஸ்கூபி கபே (Scoopi cafe) எனும் ஓட்டலில் ‘பிளாக் டைமண்ட்’ என அழைக்கப்படும் வெண்ணிலா ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படுகிறது. இதன் ஒரு ஸ்கூப் விலை ரூ. 60,000 ஆகும். வெர்சேஸ் கிண்ணத்தில் இந்த ஐஸ்கிரீம் பரிமாறப்படுகிறது. இது உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆடம்பரமான ஐஸ்க்ரீம் விற்பனை செய்யப்படுவதை நடிகையும் ட்ராவல் விலாகருமான(Vlogger) ஷெனாஸ் ட்ரஷரி என்பவர் தனது துபாய் பயணத்தின் போது கண்டுபிடித்துள்ளார்.
மேலும், அங்கு சென்று ஐஸ்கிரீம் சாப்பிடுவது தொடர்பான வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் “ஒரு ஐஸ்கிரீமுக்கு 60,000 ரூபாய்!!!! GOLD ஐஸ்கிரீம் சாப்பிடுவது துபாயில் மட்டுமே. உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம். ” என்று கேப்ஷன் செய்திருந்தார். இது சுவாரஸ்யமானது என்றும் ஐஸ்கிரீம் ருசியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.