ஜார்ஜ் டவுன், ஆகஸ்டு 1:
பினாங்கில் உள்ள பங்களா ஒன்றில் நடந்த போதைப்பொருள் மற்றும் பாலியல் விருந்தில் கலந்து கொண்ட 20 பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
நள்ளிரவு 12.30 மணியளவில் பினாங்கு மாநில D7 (சூதாட்டம் மற்றும் இரகசிய சங்கங்களுக்கு எதிரான பிரிவு) பிரிவினால் 12 முதல் 25 வயதுக்குட்பட்ட 13 ஆண்கள் மற்றும் ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
பினாங்கு மாவட்ட சிஐடி தலைவர் ரஹிமி ராயிஸ் கூறுகையில், இந்த குழுவினர் குறித்த பங்களாவை ஓர் இரவுக்கு 800 வெள்ளிக்கு வாடகைக்கு எடுத்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
மேலும் “விசாரணையில் பங்களாவுக்கான வாடகை 13 ஆண்களால் வழங்கப்பட்டது என்றும் அவர்கள் தங்களுக்குத் தெரிந்த பெண்களை இந்த டிஸ்கோ விருந்தில் சேர அழைப்பதற்கு முன்பு தலா 70 வெள்ளி கொடுத்தனர்” என்று அவர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ரஹிமி இது தொடர்பில் கூறும்போது, இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருள், ஆணுறை மற்றும் ஆடியோ சிஸ்டம் கருவிகளை போலீசார் பறிமுதல் செய்ததாகவும், சிறுநீர் பரிசோதனையில் 12 ஆண்களும் ஐந்து பெண்களும் மெத்தாம்பெத்தமின் (methamphetamine) உட்கொண்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது என்றும் தெரியவந்தது.
“போதைப்பொருள் பரிசோதனையில் சாதகமான பதிலை பெற்ற அனைத்து சந்தேக நபர்களும் நான்கு நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
“உயிருக்கு ஆபத்தான எந்தவொரு தொற்றுநோயையும் பரப்பக்கூடிய ஒரு கவனக்குறைவான செயலுக்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 269 இன் கீழும் அத்துடன் ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 மற்றும் பிரிவு 15 (1) (ஏ) பிரிவு 12 (3) ) கீழும் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றது என்றும் கூறினார்.