ஆப்பிரிக்காவின் ஜாம்பியா நாட்டில், தான் இயேசு தூதுவர் என்றும் 3 நாட்களுக்கு பின் இயேசுவை போல் உயிர்த்தெழுந்து விடுவேன் என்று தன்னைத்தானே குழி தோண்டி மண்ணில் புதைந்து கொண்ட பாஸ்டர் ஜேம்ஸ் உயிரிழந்தார்.
இயேசு கிறிஸ்து துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையப்பட்டு, உயிர்துறந்து, கல்லறையில் அடைக்கப்பட்ட பிறகும், சாவை வென்று உயிர்பெற்றெழுந்தார் என்பது கிறித்தவர்களின் உறுதியான நம்பிக்கை. ஆப்பிரிக்கா நாடான ஜாம்பியாவை சேர்ந்த பாதிரியாரான ஜேம்ஸ் சக்காரா (வயது 22 )தான் இயேசுவின் தூதுவர் என்றும் 3 நாட்களுக்கு பின் இயேசுவை போல் உயிரித்தெழுந்துவிடுவேன் எனக் கூறியுள்ளார்.
இதனையடுத்து அவர் சார்ந்திருக்கும் தேவாலயம் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் மண்ணில் குழித்தோண்டி தன்னைத்தானே புதைத்துக்கொண்டார்.
சவக்குழியில் பாதிரியார் படுத்துக்கொண்டதும் அந்த தேவாலயத்தை சேர்ந்த மற்றொரு பாதிரியார் அவரது கைகளை கட்டியுள்ளார். ஊழியர்கள் இருவர் மண்ணைப்போட்டு அந்த இடத்தை மூடியுள்ளனர். மூன்று நாள்களுக்கு பிறகு சென்று பார்த்தபோது அந்த பாதிரியார் உயிரிழந்தது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பாதிரியாரின் உடலை எடுத்துச்சென்றனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தேவாலயத்தை சேர்ந்த மற்றொரு பாதிரியாரை கைது செய்துள்ளனர். பாதிரியார் ஜேம்ஸ் உதவியாக இருந்த இரண்டு ஊழியர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.