காபூல்: சுமையாவை நாங்கள்தான் கொன்றோம் என்றும், ட்ரோன் தாக்குதலில் நடந்த படுகொலைக்கும் தாங்களே பொறுப்பேற்பதாகவும், அமெரிக்க ராணுவம் தற்போது மன்னிப்பு கோரி உள்ளது.தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி காபூல் ஏர்போர்ட்டை கைப்பற்றினார்கள். அப்போதிருந்தே அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டு வருகிறது.
அதனால்தான், காபூல் ஏர்போர்ட்டை ஆகஸ்ட் 15 ஆம் முதலே முற்றுகையிட்டு, தஞ்சமடைய தொடங்கினர்.. ஒருகட்டத்தில் கூட்டம் கூட்டமாக மக்கள் ஏர்போர்ட்டுக்குள் புகுந்ததால், அவர்களை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி ஐஎஸ் தீவிரவாதிகள் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதலை நடத்தினார்கள்.. இந்த தாக்குதல் அமெரிக்க ராணுவத்தையும் குறி வைத்தே நடத்தப்பட்டது என்று அப்போதே பேசப்பட்டது.
இறுதியில் இந்த தாக்குதலில் 12 அமெரிக்க வீரர்கள் உட்பட 72 பேர் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு பிறகு, தாலிபான்கள், ஐஎஸ் தீவிரவாதிகளின் செயல்களை கவனித்து வந்த அமெரிக்க ராணுவம், காபூல் ஏர்போர்ட் அருகே நின்ற ஒரு கொரோல்லா கார் மீது தன்னுடைய கவனத்தை குவித்தது. அந்த காரை கிட்டத்தட்ட 8 மணிநேரம் கண்காணித்தனர்.
அந்த காரின் பின்பக்கத்தில் இருந்து ஏதோ ஒன்றை கீழே இறக்கி வைப்பது போல உணர்ந்தனர்.. ஒருவேளை அது ஆயுதங்கள் தான் என்பதையும் தவறுதலாக புரிந்து கொண்டுவிட்டது. உடனே, அமெரிக்க ராணுவம் அந்த காரின்மீது ட்ரோன் ஆயுதங்களை பயன்படுத்தியது.. கார் வெடித்து சிதறி கொளுந்து விட்டு எரிந்தது.. இந்த தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
சதித்திட்டம் தீட்டியவர்களை அழித்துவிட்டோம் என்று அமெரிக்கா மார்தட்டியது.. உண்மையில் அந்த காரில் ஆயுதங்கள் எதுவுமே இல்லை.. பொதுமக்கள்தான் உயிருக்கு பயந்துகொண்டு அந்த காரில் இருந்துள்ளனர்.. அவர்கள் கீழே இறக்கி வைத்தது தண்ணீர் கேன்களைதான்.. ஆனால், தேவையில்லாமல் அவர்களை சந்தேகப்பட்டு, அவசரப்பட்டு, ஆயுத தாக்குதல் நடத்திவிட்டது.
உயிரிழந்த அந்த 10 பேரில் ஒரு குழந்தைதான் சுமையா.. 2 வயது பிஞ்சு குழந்தை.. உயிரிழந்தவர்கள் சுமையாவின் குடும்பத்தினர். அமெரிக்கர்களுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்து வந்த நாசர் என்பவரும் இந்த வெடிகுண்டில் சிதறிப்போனார். இந்த படுகொலைக்கு தாங்கள்தான் பொறுப்பு என்று இப்போது அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.அத்துடன் தங்கள் தவறுக்கும் மன்னிப்பு கோரியுள்ளது.