பெட்டாலிங் ஜெயா: மூன்று வருடங்களுக்கு முன்பு, 76.43 கிராம் எடையுள்ள சியாபு வகை போதை மருந்துகளை விநியோகித்த வழக்கில், குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட வாடகைக்கார் ஓட்டுநருக்கு ஷா ஆலம் உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.
குற்றம் சாட்டப்பட்ட முகமட் நிஜாம் இட்ரிஸ் (45) என்ற வாடகைக்கார் ஓட்டுநர், ஏற்கனவே 4.65 கிராம் எடையுள்ள அதே வகை போதைப்பொருளை வைத்திருந்த மற்றொரு குற்றத்திற்காக 18 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
அவர் கைது செய்யப்பட்ட நாளான மார்ச் 18, 2019 முதல் சிறைத் தண்டனையை அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி வழக்கில் அவர் குற்றவாளி என்று நிரூபணமான பின்னர், நீதிபதி நூருல்ஹுதா நூர் ஐனி முகமட் நோர் இந்த தீர்ப்பை வழங்கினார்.
முதல் திருத்தக் குற்றச்சாட்டின்படி, இதுவரை தனிமையில் இருப்பவரான (மணமாகாதவர்) குற்றம் சாட்டப்பட்டவர், மார்ச் 18, 2019 மாலை 3.50, உலு லங்காட்டிலுள்ள ஜாலான் இகான் இமாஸ், மெஸ்ரா பிரிமா அடுக்குமாடிக்குடியிருப்பின் தரை தளத்தில் 4.65 கிராம் எடையுள்ள சியாபு மருந்துகளை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
அபாயகரமான மருந்துச் சட்டம் (ஏடிபி) 1952 இன் பிரிவு 12 (2) இன் கீழ் அவர் குற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது, இது அதே சட்டத்தின் பிரிவு 12 (3) ன் கீழ் தண்டனைக்குரியது மற்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 100,000 வெள்ளி வரை அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்க வழி செய்கிறது.
இரண்டாவது திருத்தம் குற்றச்சாட்டுக்காக, 76.43 கிராம் எடையுள்ள சியாபு மருந்துகளை அதே இடத்தில், நேரம் மற்றும் தேதியில் விநியோகம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் 39 பி (1) (அ) ஏடிபி 1952 இன் கீழ் குற்றம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது, அதே சட்டத்தின் பிரிவு 39 பி (2) இன் கீழ் தண்டனைக்கு வழி செய்தது.
அரசு தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் முகமட் ஹெய்கல் இஸ்மாயில் வழக்கறிஞராக ஆஜரானாரகினார். குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் வழக்கறிஞர் சென் வூன் யோங் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.