கோத்தா கினாபாலு: போங்காவானில் உள்ள கம்போங் நயாரிஸ்-நயாரிஸில் இன்று அதிகாலை ஒருவர் வீட்டில் திடீரென ஏற்பட்ட தீப்பரவலில் சிக்குண்ட ஆடவர், குளியலறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இன்று அதிகாலை 3 மணியளவில் நடந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட, அப்துல் ரஹ்மான் அபு (38) என்பவர், வீட்டின் குளியலறையில் இறந்து கிடக்க காணப்பட்டார்.
சபா தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் செய்தித் தொடர்பாளர் இச்சம்பவம் பற்றி கூறுகையில், அதிகாலை 3.26 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், அதனைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாகவும் கூறினார்.
“தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்தவுடன், அந்த நிரந்தர வீடு 90 விழுக்காடு எரிந்து விட்டது. மற்றும் வீட்டிலிருந்த ஒரு புரோட்டான் சாகா காரும் 30 விழுக்காடு எரிந்து விட்டது என்றார் .
“பரிசோதனையின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர் குளியலறையில் இறந்து கிடந்தார் மற்றும் அவரது உடல் மேலதிக நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது ,” என்று அவர் கூறினார்.
மேலும், அதிகாலை 3.48 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், தீவிபத்துக்கான காரணத்தை அவர்கள் ஆராய்ந்து வருவதாகவும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.